சர்வே ஜனா சுகினோ பவந்து.....

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

Matha, Pitha Vs. Guru

Note: This post is not to underestimate or undermine anybody or anything. This is just about something that is bothering me. Feel free to to contradict. If I find your argument agreeable, I am game to change my ideas.

It should always be Matha, Pitha, Guru, Deivam. What happens when it becomes Matha, Pitha Vs. Guru?!



When there are so many burning issues in the country, I am really not sure how important or essential it is to install a statue and the PM coming down to inaugurate it. Let me even keep this aside as a personal choice of individuals.

The primary thing that has been bothering me is the young men and women being converted to sanyasis. Is it not possible for human beings to be in gruhastha dharma and still work for the human upliftment both worldly and spiritually? Even the great Adi Shankara had to seek his mother's permission to take sanyasa and did so  only after His mother accepted. However, in this case, I hear of men and women claiming that they are 18+ years old and can decide on their own. Whether you are 18+ or 80+ - don't you owe to your parents to whom you are the sole reason of life? There may be an argument that we need sanyasis to reinstate dharma and lead to spiritual upliftment of the country. This is all said well until such a thing happens in our very home! I strongly believe this should happen with the acceptance and blessings of the parents without which it is as good as nothing!!

People who know me - You know I am spiritual myself and follow the Guru marga. I am not against any Gurus. But, I am worried about the corporate culture here! My Guru Yogi Ramsuratkumar lived all His life as a beggar on the streets and never did He have any wealth attached to Him. So was Maha Periyava and Ramana Maharishi. Yogi advised people to do whatever they did as a yagnya. If you are a gruhastha, perform your gruhasthashrama properly. If you are a student, studies is your yoga.  He never advised anyone to renoucne the world. Yet, there are zillions of His devotees out there who perform their duties and still contribute spiritually. Coming from such a background, I am totally shocked by this corporate culture.

May the divine descend and show us the true bhakthi marga!









ஞாயிறு, 18 டிசம்பர், 2016

"பிறந்த" வீடு


முன் குறிப்பு: நான் பிறந்து வளர்ந்த வீட்டை விற்ற ஒரு நாளில் எழுதியது.

முன் குறிப்பு: நான் பிறந்து வளர்ந்த வீட்டை விற்ற ஒரு நாளில் எழுதியது.

பிறந்து வளர்ந்த வீட்டை விற்பது ஆனதிலும் கொடுமை வேறில்லை.
தண்ணீர் சேந்திய கிணற்றை மூடிய சோகமே இன்னும் நெஞ்சை அடைக்க,
அதற்குள் வீட்டை கிரயம் செய்த துக்கத்தை எங்கே போய் சொல்ல?

நடை பழகிய முற்றம்
அனைவரும் ஒன்றாய் கதை பேசிப் படுத்துறங்கிய கூடம்
நடுவே இருந்த இருட்டு உள்
அண்ணனுடைய வாசல் உள்
அம்மா பெரும்பொழுதை கழித்த சமையலறை
எலுமிச்சையும், கொய்யாவும், வாழையும், ரோஜாவும், மல்லியும் பூத்துக்குலுங்கிய புழக்கடை


இவை அனைத்தினும் மேலாக தாய் மடியை விடவும் நான் அதிகம் கிடந்த மொட்டை மாடி
பிதாகரஸ் தியரமும் கெமிக்கல் ஈக்வேஷனும் அழித்து அழித்து நான் எழுதிய அதன் தரை
நட்புக்களுடன் அமர்ந்து மணிக்கணக்கில் கதை பேசிய அதன் பிடி சுவர்
நாலிரண்டாக தாவி இறங்கிய மாடிப்படிகள்
மறக்குமோ அந்த நாட்கள்?

எதிர் வீட்டு பேபி மாமி, அதன் அடுத்த வீட்டு துளசி டீச்சர்
இடப்பக்க வீட்டு ஜெயா அக்கா, வலப்பக்கத்தில் அரிசிக்கடை வீடு
தெருவின் நடுவில் ஆயில் கடை வீடு, அது தாண்டி சிங்காரம் பிள்ளை பள்ளி
முனுசாமி கடை, மாஸ்டர் எம்போரியம், டி கே ப்ரதர்ஸ், அய்யாசாமி கடை, ரஞ்சித் ஹோட்டல் பரோட்டா.

இவை எல்லாம் மட்டுமா இனி அந்நியம்?

தாமோதரப் பெருமாள், வரசித்தி விநாயகர், பாலியம்மன், அகஸ்தீஸ்வரர்
இவர்களும் அல்லவா இனி அந்நியம்?

வீட்டை வாங்கியவரிடம் சாவியைத் தந்து படியிறங்கும் பொது இறுதியாய் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன்.
இறந்து மீண்டும் ஒரு முறை பிறந்தேன்.

 உடல் வேறாய் மனம் வேறாய் இறக்க முடியும் என்று அறிந்த தருணம் அது!

முன்பெல்லாம் வில்லிவாக்கம் என்ற பேரைக் கேட்டால் கண்களில் ஒரு மின்னல் தோன்றும்.
இனி, அப்பெயர் கேட்டால் கண்களில் இரு துளி கண்ணீர் தோன்றும்.
பிறந்த மண்ணின் வேரினை அறுத்து பிழைப்புக்காக வேறிடம் விழுதை நடுகின்றேன்
நாளை என் பெண்ணும் இவ்வாறு அழுதிடுவாளோ?

செவ்வாய், 13 ஜனவரி, 2015

Disclaimer: This not my usual "on the light-side" blog!

அப்பா...
ஐந்து வருடங்களில் மூன்று இழப்புகள். இதில் என்னை மிகவும் பாதித்தது சமீபத்திய என் அப்பாவின் மரணம். இதற்கும் நான் ஒன்றும் "அப்பா பெண்" கிடையாது. ஒரு வேளை, என் அம்மா மற்றும் அண்ணாவின் மரணங்களை அருகில் இருந்து பார்க்காததும், அப்பாவின் மரணத்தை அணு அணுவாக அருகில் இருந்து பார்த்ததாகவும் இருக்கலாம். இத்தனைக்கும் இது ஒரு கல்யாண சாவு - 84 வயதில் பேரன், பேத்தி, கொள்ளு பேத்தி என்று பார்த்த, சுற்றி உறவுகள் இருந்த ஒரு மரணம். மரணத்துக்குப் பின்னான வாழ்வை பற்றி என்னை நினைக்க வைத்த ஒரு மரணம்.
அப்பா - எந்த சூழ்நிலையிலும் தன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ள தெரிந்த ஆத்மா. உணவு ரசிகர். அவர் சாப்பிடும் விதமே அலாதி. ரசத்தில் உள்ள கடுகுகளை தனியாக பிரித்து உண்பதிலாகட்டும், பருப்பு பொடி சாதத்தில் ரசத்தை விட்டு சாப்பிடுவதில் ஆகட்டும் - ஒரு நேர்த்தி, ஒரு ரசிப்பு இருக்கும். கடைசிவரை தன் பாசத்தை பிள்ளைகளிடம் வெளிப்படுத்தாமலே வாழ்ந்தவர். டிவி சீரியல் பிரியர். பேரன் பேத்திகளுக்கு சமமாய் போட்டி போட்டவர், சிரித்து கலாய்த்து வம்பு செய்தவர். கடைசி தினங்களிலும் என் மகளுடன் சம வயதுக்காரர் போல டிவி க்காக சண்டை போட்டவர். தனக்கும் மரணம் என்று ஒன்று உண்டென்றே அவர் எண்ணி இருப்பாரா என்பதே சந்தேகம் தான். வாழ்வின் மேல் அப்படி ஒரு பற்று கொண்டவர்.
இப்படி பட்ட அவர், கடைசி தினங்களில் உண்ண முடியாமல் பட்ட அவதி இன்னும் என் மதில் பாரமாய்! நினைவலைகள் தப்பியும், "TV you tube-ல் படம் போடட்டுமா அப்பா?" என்று கேட்டதும், தினம் ஒன்றாக ஒளவையார், கர்ணன் என்று பழைய படங்களை போடச் சொல்லி பார்த்த அவரின் வாழ்வின் மேல் பிடித்தம் இன்னும் ஆச்சர்யமாய்! 
அக்டோபர் 6 - அன்று தான் கடைசியாய் என் வீட்டில் இருந்து கிளம்பி ஆஸ்பத்திரி போனார் - மீண்டும் திரும்பி வராமலே. தீனமாய் நடந்து படி தாண்டும் போது என்ன நினைத்திருப்பார் - மீண்டும் திரும்பி வருவோம் என்றா? இல்லை, தான் வாழப்போவது இன்னும் சில மணி நேரங்கள் தான் என்றா? அன்று இரவு ஆஸ்பத்திரியில், என்  கன்னத்தை தடவி "ரொம்ப தேங்க்ஸ் மா" என்ற போது அது தான் தான் பேசும் கடைசி வாக்கியம் என்று அறிந்திருப்பரா?
இன்றும் நள்ளிரவில் கண் விழித்தால், அவர் அறையில் "ராதா சமேதா கிருஷ்ணா" என்று கரகரத குரலில் அவர் பாடும் சப்தம் கேட்கிறது. இனி என் வாழ்வில் யார் பாடியும் அந்தப் பாடலைக் கேட்க முடியாது என்றே தோன்றுகிறது.

வியாழன், 23 டிசம்பர், 2010

சுனிதா சாமி யமுனா சாமி

என் ஸ்கூல் friends சுனிதாவும் யமுனாவும். அவங்க எப்படி எங்களுக்கு சாமி ஆனாங்கங்கறது தான் இந்த கதை.

நான் எட்டாப்பு படிக்கும்போது (அட சத்தியமா படிச்சேங்க, நம்புங்க!) எங்க பள்ளிகோடத்துல மெர்சி மிஸ் மெர்சி மிஸ் னு ( ரெண்டு பேர் இல்லீங்க ஒருத்தர் தான்) ஒரு கணக்கு டீச்சர் இருந்தாங்க. ரொம்ப நல்லவங்க. (சத்தியமா தாங்க). என்ன, கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். பொம்பள பசங்க பாய்ஸ் கூட பேசக்கூடாது, ஸ்கூலுக்கு வெளிய நின்னு அரட்டை அடிக்க கூடாதுன்னு சின்ன சின்ன விஷயம்லாம் எதிர் பார்ப்பாங்க. எங்க கிளாசுக்கு அப்போ அவங்க கணக்கு எடுக்கல.

அந்த காலத்துல எல்லாம் நாங்க ரொம்ப நல்ல பசங்க (உஷ்... யாரங்க சிரிக்கறது?) அப்டியாப்பட்ட நேரத்துல, ஒரு நாள் ஸ்கூலுக்கு வெளிய நானும் என் பிரெண்ட் சுனிதாவும் யமுனாவும் நின்னு பேசிக்கிட்டிருந்தோம். ஏதோ அறியாத வயசு, கொஞ்சம் சத்தமா சிரிச்சு பேசிட்டிருந்தோம். அப்போ திடீர்னு இந்த ரெண்டு பய புள்ளைகளும் அமைதி ஆயிடுசுக. இதுல இருக்க வில்லங்கம் தெரியாத நானு, செரி அவுகளுக்கு தானே சிரிப்பு நின்னு போச்சு, நமக்கு இன்னும் வருதுல்லன்னு continue பண்ணேன். அடுத்த நாள் ஸ்கூலுக்கு போனா, மெர்சி மிஸ் கூப்டனுப்பினாகன்னு தாக்கல் வந்துச்சு. நமக்கு தான் building strong basement weak ஆச்சே. ஒதரிகிட்டே ஒரு மாதிரி போய் நின்னேன். உடனே மிஸ் என்ன பார்த்து, "இப்படி தான் ரோட்ல நின்னு சிரிக்கறதா? பொம்பள புள்ளைக்கு அடக்கம் வேணாம். சுனிதா சாமி யமுனா சாமின்னு" திட்டினாங்க. அப்போ தான் எனக்கு புரிஞ்சுது இந்த பய புள்ளைக என்ன மட்டும் மாட்டிவிட்டுட்டு அதுக ரெண்டும் s ஆயிடுசுகன்னு. இதென்னடா வம்பா போச்சு, ரோட்ல நின்னு சிரிக்கலன்னா அவங்க சாமி ஆயிடுவாங்களா? மிஸ்ஸுக்கு தான் சுனிதா மேலயும் யமுனா மேலயும் என்ன நல்ல மதிப்பு. நாம தான் சாமியாகர வாய்ப்ப எழந்துட்டோம் னு ஒரு வருத்தமா போச்சு. இப்படியா யோசிச்சுக்கிட்டு நான் பேந்த பேந்த நிக்கவும், மிஸ் "சரி போ. இனிமே இப்படி பண்ணாதேன்னு" அனுப்பி விட்டுட்டாக. (என்ன punishment கெடைச்துன்னு ஆவலா படிச்சுக்கிட்டு இருந்தவங்களுக்கெல்லாம் - பல்பு)

ஆனாலும், எனக்கு அவங்க ரெண்டு பெரும் சாமியானதும் நான் ஆகாததும் கொஞ்சம் வருத்தம் தான். கிளாசுக்கு வந்து இத மத்த பசங்க கிட்ட சொன்னதும் எல்லாரும் கொஞ்ச நேரம் முழிச்சுட்டு (ஏதோ நான் மட்டும் தான் முழிச்சேன்னு நீங்க நெனைச்சுட கூடாது இல்ல) அப்புறம் யாரோ ஒரு அறிவு ஜீவி (யாருன்னு ஞாபகம் இல்ல) சொல்லிச்சு அது "சுனிதா சாமி யமுனா சாமி" இல்ல. அது "சுனிதா saw me யமுனா saw me" னு. அப்புறம் தான் எனக்கு போன உசுரே திரும்பி வந்துச்சு. இப்டி தான் என் friends சுனிதாவும் யமுனாவும் எங்களுக்கு சாமி ஆனாங்க.

டிஸ்கி: இது நடந்து ரெண்டு வருஷம் கழிச்சு, நான் பத்தாப்பு படிக்கும் போது இதே மிஸ் எங்களுக்கு கணக்கு டீச்சர். அப்போ நான் தான் அவங்க favourite ஸ்டுடென்ட். (அட..யாரங்க விழுது விழுந்து சிரிக்கறது. பார்த்து அடி கிடி படப்போகுது. சொன்னா நம்பனும். இப்டி சந்தேகம்லாம் படப்பிடாது. ) கண்டிப்பா இத உண்மையான்னு தெரிஞ்சே ஆகணும்னு நெனைக்கறவங்க, என் friend MSK கிட்ட கேளுங்க. ஒரு நாள் answer ஷீட்ட distribute பண்ணிட்டு, மிஸ் Dr Jekyll and Mr Hyde ஆ மாறி ஒரு பக்கம் MSK வ கொதறி தள்ளிக்கிட்டு இன்னொரு பக்கம் என்ன கொஞ்சின கதைய கண்ணீர் கதையா சொல்லுவான். அப்பவாவது நம்பறீங்களா பார்க்கலாம். என்ன MSK ஞாபகம் இருக்கா?

செவ்வாய், 19 அக்டோபர், 2010

எந்திரன் பார்த்த பின் என் மனதில் தோன்றிய சில "நன்றாக இருக்கும்" எண்ணங்கள்!

டிஸ்கி: இவை என் சொந்த கருதுதுக்கள் மட்டுமே. நான் என்ன சின்னதிரைலையா வந்து விமர்சனம் சொல்றேன். என் ப்ளாக் தானே எழுதறேன். விடுங்க விடுங்க பாஸ்! ஏதோ முந்நூறு ரூபா ஒரு டிக்கெட் க்கு கொடுத்த வேகத்துல எழுதறேன். என்ன தான் தலைவருக்காக படத்த ரசிச்சாலும் பாழும் மனசு சும்மாவிடுதா.
  • ரஜினிகாந்த், இனி அமிதாப் பச்சன் போல தன வயதுக்கு தகுந்த பாத்திரங்களில் மட்டுமே நடித்தால் நன்றாக இருக்கும்.
  • தமிழ் திரை உலக பாடலாசிரியர்கள் இனி தங்கள் பாடல் வரிகள் புரியுமாறு இசைஅமைத்தால் மட்டுமே A R ரஹமானின் இசையமைப்பில் பாடல்கள் எழுதுவோம் என்று அறிவித்தால் நன்றாக இருக்கும்.
  • A R ரஹமான் வெறும் synthesizer - மட்டும் நம்பாமல், நம் பாரம்பர்யம் மிக்க தாளவாதியங்கள் மற்றும் தந்தி வாதியங்களையும் உபயோகித்தால் நன்றாக இருக்கும். (என்ன இருந்தாலும் ராஜா ராஜா தான்!)
  • சூப்பர் ஸ்டார் தான் உபயோகிக்கும் லிப் ஸ்டிக்கின் அளவை குறைத்தால் நன்றாக இருக்கும்.
  • இயக்குனர் ஷங்கர், தன முந்தைய படங்களான முதல்வன் மற்றும் இந்தியனில் இருந்தது போல costume களில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். (ஐஸ்வர்யா ராயின் உடைகள் சகிக்கவில்லை!)
  • சந்தானம், பாஸ் என்கிற பஸ்கரனில் நடித்தது போல நல்ல சிரிக்க மற்றும் ரசிக்கத் தகுந்த பாத்திரங்களில் மட்டும் நடித்தால் நன்றாக இருக்கும்.
  • கடைசியாக, (last but definitely not the least), ஐஸ்வர்யா ராய் தயவு செய்து நடிப்பதை நிறுத்தினால் நன்றாக இருக்கும். ஹ்ம்ம்... நாம ஆசைப் படரதேல்லாம் நடந்துடுதா என்ன!

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

எதையும் ஒரு முறை

என்ன சுஜாதாவோட நாவல் டைட்டில் மாதிரி இருக்கேன்னு யோசிக்கறீங்களா?
அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, இது நம்ம சொந்த கதை சோகக்கதை.

எங்க வீட்டு தங்கமினிக்கு எப்பவும் அம்மாவுக்கு தான் எல்லாம் தெரியும்னு ஒரு நெனப்பு. அவங்க அப்பா சொன்னா கூட ஒரு தடவ என் கிட்ட கிராஸ் செக் செஞ்சுப்பா. எதுவா இருந்தாலும் என்னை தான் நம்ம்ம்பி கேப்பா. எதையும் ஒரு முறை (அப்பாடி! டைட்டில் வந்துருச்சு.) என் வாயால கேட்டா தான் அவளுக்கு திருப்தி.

இது இப்படி இருக்கறப்போ, ஒரு சுப யோக சுப தினத்துல அவங்க மிஸ் (அவங்களுக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்!) ஒரு இந்திய பொலிடிகல் மேப்ப குடுத்து, அதுல எல்லா ஸ்டேட் capitals உம் மார்க் பண்ணி எடுத்துட்டு வர சொன்னாங்க. அவங்க அப்பா, "நான் ஹெல்ப் பண்றேன்"னு சொன்னதுக்கு கூட, மினி, இல்லப்பா எதுக்கும் அம்மா வந்துடட்டும்னு சொன்னா. அப்பவே, ரசத்துக்காக கரைசுக்கிட்டுருந்த புளி, என் வயத்துலயும் கரைய ஆரம்பிச்சுடுத்து. நானும் நல்ல மாதிரி, "இல்லம்ம்மா, அம்மா பிஸியா இருக்கேன்ல, அப்பா கிட்ட கேட்டுக்கோன்னு" சொன்னேன். ஆனா அவ ரொம்ம்ம்ப தெளிவா இருந்தா - நீ வந்த மேப்பு, இல்லேன்னா வெளையாட கேப்புன்னு. எந்த ஸ்டேட் க்கு எந்த கேபிடல் னு தெரியுமே ஒழிய, அந்த கேபிடல் மேப்புல எங்க இருக்குன்னு எல்லாம் கேப்பாங்கன்னு நான் கண்டேனா? இதுக்கு தான் படிக்கற வயசுல ஒழுங்கா படிக்கணும்கறது. அந்த காலத்துல, 10th எக்ஸாம்க்கு முன்னாடி, ப்ரோடோ மிஸ் என்னை பார்த்து "விஜி, நீ டைம் இருந்தா மேப் அட்டெம்ப்ட் பண்ணு இல்லன்னா விட்டுடு" னு சொன்னதுக்கு அர்த்தம் இப்ப தான் தெரிஞ்சுது.

சரி, விதி வலியதுன்னு நானும் போய், உதாரா நமக்கு தெரிஞ்ச நாலஞ்சு எடத்த சரியா மார்க் பண்ணி குடுத்துட்டேன். அப்புறம், "ஏம்மா, எதுக்கும் அந்த அட்லஸ் எடு. சரியாய் பார்த்து எழுதிடலாம்னு" சொன்னேன். அதுக்கே ஒரு மாதிரி பார்தவ, நான் அட்லஸ் அ தேடி பார்த்ததை பார்த்துட்டு விட்டாளே ஒரு லுக்! ஹ்ம்ம்.. என்னமோ போங்க. போற போக்க பார்த்தா, நான் வேலைய விட்டுட்டு, history geography எல்லாம் மோதல்லேருந்து ஒரு தடவ படிச்சு வெச்சுக்கறது நல்லதுன்னு தோணுது. பார்ப்போம்!

டிஸ்கி: இந்த பதிவுக்கு "மேப்பு வெசுட்டாய்யா ஆப்புன்னு" உம் ஒரு டைட்டில் யோசிச்சேன். அப்புறம், சுஜாதாவா இல்ல வடிவேலுவான்னு ஒரு சின்ன மனப்போராட்டதுக்கப்புறம், சுஜாதா தான்னு (ஹி...ஹி.. எப்பவும் போல) முடிவுக்கு வந்துட்டேன்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

திருச்சி ட்ரிப் - பார்ட் 1

சரி, ஸ்ரீரங்கத்த பத்தி எழுதின கையோட திருச்சி ட்ரிப் பதியும் எழுதிடுவோம் ஒரு வேகம்.
வைகுண்ட ஏகாதசிக்கு மொத நாள் நான் ஏற்கனவே சொன்னா மாதிரி திருச்சி ட்ரிப் அடிப்போம்னு கெளம்பினோம். எங்கே போறதனாலும் கார்லயே போய்டறது ஒரு சௌகர்யம் தான்.
பெங்களூர்ல கெளம்பி, ஹோசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் வழியா போகலாம்னு ரூட் மேப் எல்லாம் ரெடி பண்ணிண்டு கெளம்பினோம். எங்களோட எல்லா இழுப்புக்கும் எங்க வீட்டு தங்க'மினி' தயாரா இருப்பது ஒரு பெரிய ஆறுதல். இந்த சந்தர்ப்பத்துல அவளுக்கு ஒரு பெரிய 'நன்றி'.

முதல் ஸ்டாப் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்ல நிறுத்தினோம். மத்தியான நேரத்துல போனதால பூஜை எல்லாம் பார்க்க முடியல. ஆனா ஆஞ்சநேயர் திறந்த வெளில நிற்பதால் தரிசனம் நல்லா கெடைச்சது. இங்கே இருக்கற ஆஞ்சநேயர் வளர்ந்துண்டே இருப்பதால் அவருக்கு கூரை கோபுரம் எல்லாம் இல்லைன்னு கேள்வி பட்டிருந்தேன். இதப்பத்தி அங்கே இருந்த ஆபீசில ஒருத்தர் கிட்ட விசாரிச்சேன். ஆனா அவர் இதெல்லாம் டூப் என்றும் ஆஞ்சநேயர் அப்படி எல்லாம் வளர்வது இல்லைன்னும் சொன்னார். ஆஞ்சநேயருக்கு எதுத்தாப்போல இருக்க மலையே நரசிம்ம சொரூபம்னும், அப்படிப்பட்ட நரசிம்மருக்கே கூரையோ கோபுரமோ இல்லாத போது இவர்க்கு கட்டக்கூடதுன்னும் தான் கூரை இல்லையாம்.

இந்த சமயத்துல தான், நம்ம 'மினி', "அம்மா, இந்த ஆஞ்சநேயருக்கு மாலை போடணும்னா ஒரு பக்கம் தான் படி வெச்சு கட்டியிருக்காங்க. அப்போ எப்டி மாலய எட்டி முழுசா போடுவாங்க?", "அம்மா, இந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாத்தனும்னா எவ்ளோ லிட்டர் பால் வேண்டியிருக்கும்?" னு டெக்னிகலா கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டா. (நான் மனசுக்குள்: உக்கும்... இந்த கேள்வியெல்லாம் உங்க அப்பா கிட்ட கேக்க வேண்டியது தானே). நான் உடனே, சரிடப்பா ஆஞ்சநேயா. இந்த கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லனும்னா, நீ என்னோட அறிவ அளவில்லாம வளர்க்கணும். அது உனக்கும் ரொம்ப கஷ்ட்டமான விஷயம். அதனால உத்தரவு வாங்கிக்கறேன்னு, அங்கேந்து கெளம்பினேன்.

ரங்கமணிக்கு, வெயிட் பண்ணி நாலு மணிக்கு நரசிம்மர் கோயில் தரிசனம் பார்த்துட்டு கிளம்பனும்னு ஆசை. ஆனால், அதுக்கப்புறம் கெளம்பினா லேட் ஆயிடும்னு அவரை ஒரு வழியா சமாதனா படுத்த முயற்சி பண்ணி, அது தோத்து போய், அதுக்கப்புறம் நானே நரசிம்ம அவதாரம் எடுத்தப்புறம் தான் கிளம்பினார்.
அங்கேருந்து கெளம்பி வழியில குணசீலம் பெருமாள தரிசனம் பண்ணோம்.
(நீங்கல்லாம், சரியான எடத்துக்கு தான் போயிருக்கான்னு சொல்றது காதுல விழுது. சரி, சரி... நோ சில்லி பீலிங்க்ஸ்)

அப்புறமா ரொம்ப ஆர்வமா காவேரிய பாக்கணும்னு கெளம்பி திருச்சி போனோம். அங்கே தேசலா ஓடிக்கிட்டுருந்த காவேரிய பார்த்து ரொம்ப வருத்தமாயிடுச்சு. என்ன தான் நாங்க பெங்களூர்ல இருந்தாலும், நாங்க பண்றது எங்களுக்கு அநியாயமா தான் இருக்கு. என்ன பண்றது!

சரி. ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கறேன். மீதி பார்ட் டூ ல தொடர்ரேன்.
வர்ட்டா!!